சிரியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலை இஸ்ரேலின் எதிர்க்கட்சியான 'ஜனநாயகக் கட்சித் தலைவர்' யாயிர் கோலன் (Yair Golan) கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது துருக்கியுடன் தேவையற்ற மோதலை ஏற்படுத்தும் ஆத்திரமூட்டும் மற்றும் ஆபத்தான நடவடிக்கை என்று அவர் எச்சரித்துள்ளார்.
எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இராணுவ பலம் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தப்படுவதாகவும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரவாத மற்றும் நம்பகத்தன்மையற்ற நபராக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நெதன்யாகு இஸ்ரேல் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், அரசியல் பிழைப்புக்காக மற்றொரு போரை உருவாக்கும் தலைமைக்குப் பதிலாக, பாதுகாப்பை அடையக் கூடிய வலிமையான தலைமை நாட்டுக்குத் தேவை என்று வாதிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரியாவின் அபு அல்-துஹூர் (Abu al-Duhur) இராணுவ விமான நிலையத்தின் ஓடுபாதையைக் குறிவைத்து எட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.