இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் சிறீதரன் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இடம்பெறாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துதல், அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்துதல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
மேலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், வடக்கின் வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாக விளங்கும் காங்கேசன்துறை துறைமுகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் விரிவாக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.