தாத்தா கொலையில் காதலனுடன் சிக்கிய 13 வயது பேத்தி

கேரளத்தில் 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது 13 வயது பேத்தி, அச்சிறுமியின் காதலன் மற்றும் இரண்டு நண்பர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலப்புழாவில் 65 வயது முதியவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது உடல் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

காவல்துறையினர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

கைதான சிறுமியின் தாய் பிரசவத்திற்காக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் பாட்டியும் சென்றிருந்ததால், முதியவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த வழக்கில் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 13 வயது பேத்தியின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆலப்புழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரதீப் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கொலை தொடர்பான தகவல்களை அந்தச் சிறுமி தெரிவித்தார்.

"சிறுமி அளித்த வாக்குமூலத்தில் சில முரண்பாடுகள் இருந்ததோடு, அவரது உடல் மொழியும் ஏதோ ஒன்றை மறைப்பது போல் இருந்ததால், அவரிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் சிறுமி தெரிவித்த தகவல்களின் முரண்பாடுகள் ஒவ்வொன்றாக சரிபார்க்கப்பட்டு, கொலைச் சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறைக்கு முக்கியமான தகவல்கள் கிடைத்தன" என்று அவர் கூறினார்.

சிறுமியின் 17 வயது காதலன் மற்றும் 16, 17 வயதுடைய அவரது நண்பர்கள் இருவரும் இந்தக் கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக விஷ்ணு பிரதீப் கூறினார்

சிறுமி தனது வீட்டில் இருந்தபடியே கொலைத் திட்டத்தை ஒருங்கிணைத்ததாகவும், மூன்று சிறுவர்களும் வீட்டின் பின்புறத்தில் இருந்த காற்றோட்டப் பாதை வழியாக உள்ளே நுழைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

''சிறுவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும், முதியவருக்கும் சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரை கொலை செய்ததை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்'' என்கிறார் விஷ்ணு பிரதீப்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் சுமார் 4.5 சவரன் நகைகள் சிறுவர்களின் வீடுகள் மற்றும் அடகு கடையிலிருந்து மீட்கப்பட்டதாக விஷ்ணு பிரதீப் கூறினார்.

சிறுமி வீட்டுக்கு தாமதமாக வருவது குறித்து தாத்தா தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததாகவும், கண்டிப்புடன் வளர்த்து வந்ததால் சிறுமிக்கு அவர்மீது கோபம் ஏற்பட்டிருந்ததாகவும் எஸ்.பி விஷ்ணு பிரதீப் தெரிவித்தார்.

ஆனால் இந்தக் கொலைக்கான மற்றொரு காரணமாக, தனது தாத்தா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி தனது காதலனிடம் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கைதான சிறுவர்களும் சிறுமியும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Bootstrap