இனி இஸ்ரோ ராக்கெட் ஏவாது : அது தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.. மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி!

இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்காக விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு இஸ்ரோ நிறுவனம் 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை ஏவியதில் தொடங்கி, சொந்தமாக விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பும் ராக்கெட்களை உருவாக்குவது வரை பல்வேறு சாதனைகளை படைத்தது.

அதன் உச்சமாக சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவுக்கே விண்கலனை அனுப்பி இஸ்ரோ உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதோடு உலகிலேயே செயற்கைக்கோள்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் துல்லியமாக விண்ணில் ஏவி, சர்வதேச அளவில் ஒரு நம்பகமான வணிக விண்வெளி அமைப்பாகவும் உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் இஸ்ரோ அமைப்பு மட்டுமே விண்வெளி ஆய்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், சமீப காலங்களில் இதில் தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், இஸ்ரோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஏவும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

N-SPACe என அழைக்கப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவரான டாக்டர் பவன் கோயங்கா, (Pawan Goenka) 'பிசினஸ் டுடே' நடத்திய மாநாட்டில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ராக்கெட்டுகள் தயாரிப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இஸ்ரோ இனி ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், அதிநவீன விண்வெளி உள்கட்டமைப்பு மற்றும் அறிவியல் சார்ந்த விண்வெளிப் பயணங்களில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனமான SSLV-ன் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி உரிமைகள் ஏற்கனவே எச்.ஏ.எல் (HAL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் PSLV மற்றும் LVM3 ஆகிய உயர் ரக ராக்கெட்டுகளின் தொழில்நுட்பங்களையும் தனியாருக்கு மாற்றும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதுவரை இஸ்ரோவின் 120-க்கும் மேற்பட்ட விண்வெளித் தொழில்நுட்பங்கள் தனியார் துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bootstrap