தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு மக்கள் பேரணித் தொடரொன்று நடத்தப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் .
களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், கிராம மட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் தேர்தல் குழுக்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 05 ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் தலைமையில் மாவட்ட ரீதியில் தொடர் மக்கள் பேரணிகள் ஆரம்பமாகவுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆணை திரண்டுள்ளதாகக் கூறும் எதிர்க்கட்சிகள், அறிக்கைகளை விடுப்பதோடு நிறுத்திவிடாமல் அதனை வீதியில் இறங்கி நிரூபித்துக் காட்ட வேண்டும்.
அரசாங்கத்திற்கு எதிராக அவ்வாறானதொரு மக்கள் கருத்து நிலவுமானால், அதைச் செயலில் காட்டுவதே அவர்கள் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
தாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை அவர்கள் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் .