உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்சங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தக் கட்டளை அறிவிக்கப்பட்டது.
இன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு வாய்மொழி மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததை அடுத்து, இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக, சதித்திட்டம் தீட்டியமை உட்பட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகளின் 10 வாக்குமூலங்கள் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், வெடிபொருட்கள், வாள்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட 2,076 சான்றுப்பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள், மரபணு அறிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.