நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த, தவல், மேகா ஷா தம்பதியர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.
புதன்கிழமை காலை உள்ளூர் நேரப்படி சுமார் 8.37 மணியளவில், நேபாள திபெத் எல்லையில், திடீரென பனிப்பாறைச் சரிவு ஏற்பட, பனி, சேறு மற்றும் பாறைகள் பெயர்ந்து நதியாக உருமாற, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெருவெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாக, 1,400க்கும் அதிகமானோர் மாயமாகிவிட்டார்கள்.
அப்படி மாயமானவர்களில், தவல், மேகா ஷா தம்பதியரும் அடங்குவர். இந்நிலையில், தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
தவலின் சகோதரி உறவு முறையினரான நிகிதா ஷா இது குறித்துக் கூறும்போது, தங்கள் உறவினர்கள் ஹொட்டல் கைலாஷ் என்னும் ஹொட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், தாங்கள் கனடா அரசின் உதவியை நாடியதாகவும், அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஏதாவது தகவல் கிடைத்தால் தெரிவிப்பதாகவும் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் நிகிதா.
அவர்களைப் பொருத்தவரை, எதுவும் தெரியவில்லை என்று கூறுவது மிகவும் எளிது என்றும், ஆனால், ஏதாவது உறுதியான தகவல் கிடைத்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறுகிறார் நிகிதா.
இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ளத்தில் காணாமல் போன கனேடியர்களின் எண்ணிக்கை 25இலிருந்து 30ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.