அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் இருப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem Gharibabadi) கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் பகுதி எனக் கூறி ட்ரம்ப் பதிவிட்டமையை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க எல்லைப் பகுதியாகக் காட்டும் வரைபடப் பதிவொன்று வெளியிடப்பட்டது.
அதில் உலகின் மிக முக்கியமான கடல்சார் எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் புதிய பகுதி (NEW US Territory) எனக் குறிப்பிட்டு ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ளஅமைச்சர், ட்ரம்பிற்கு மன மாயத்தோற்றங்களும் பிரமைகளும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனச்சிதைவு நோய் என்பது சிந்தனைக் கோளாறு மற்றும் யதார்த்தத்தை உணர முடியாத மனநலப் பாதிப்பு என்றும் இத்தகைய நோயாளிகள் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அமெரிக்கா கூறிவரும் வேளையில், ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.