யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் வெள்ளிக்கிழமை(28) ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுகின்றது.
தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை(28) தினத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில். இந் நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலங்குவானூர்தி மூலம் தீயணைக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தீ ஏற்பட்டுள்ள பகுதியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தீ மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஜெயானந்தமூர்த்தி ரஜீவன் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.