பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்மமான முறையில் தோன்றி மறைந்த தீவு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட வில்லிஸ்டன் நீர்த்தேக்கத்தில் (Williston Lake reservoir) மரங்கள் செறிந்த மாபெரும் தீவு ஒன்று திடீரெனத் தோன்றி, பின்னர் மர்மமான முறையில் மறைந்துள்ளது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 70 மீட்டர் அகலமும், 140 மீட்டர் நீளமும் கொண்ட (தோராயமாக இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவுள்ள) இந்த மிதக்கும் தீவு, மக்கென்சி பகுதிக்கு வடக்கே உள்ள நீர்த்தேக்கத்தில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் படகில் சென்றவர்களால் கண்டறியப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.

இது ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பொய்யான வீடியோவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஜூலை 21 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இது உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. W.A.C. பென்னட் அணையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் இது மிதந்துள்ளது.

ஆகஸ்ட் 5-க்குள் இந்தத் தீவு செயற்கைக்கோள் படங்களிலிருந்து மறைந்துவிட்டது. ஆற்றின் நீர்மட்டம் அல்லது காற்று வீசும் திசை காரணமாக இது கரைப்பகுதியிலோ அல்லது ஒதுக்குப்புறமான இடத்திலோ தஞ்சம் அடைந்திருக்கலாம் என்று B.C. ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியதால், கரையோரம் பல ஆண்டுகளாகத் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் மரங்களின் வேர்களில் செடிகள் முளைத்து, நீர்மட்டம் உயர்ந்தபோது தனியாகப் பிரிந்து மிதந்து வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இந்த மிதக்கும் தீவு மற்றும் அதிக நீரினால் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் படகு ஓட்டுவோருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால், அப்பகுதியில் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Bootstrap