வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளால் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்பதில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசுக் கட்சி, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இருந்தால் இந்த விடயத்தில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இம்முறை பல்வேறு அமைப்புகள் தங்களுக்குள் கலந்துரையாடாமலும், அழைப்பு விடுக்காமலும் தனித்தனியாக நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளதால், அவற்றில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் பங்கேற்பதற்கு எவ்விதத் தடையும் இல்லை எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.