ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் – பதிலடி கொடுத்த ஈரான்

ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட முதல் இராணுவத் தாக்குதல் இதுவாகும்.

ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளைப் பொருத்துவதற்கான ரொக்கெட்டுகளை ஏவ ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தயாராகி வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமது வான்வெளிக்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் இராணுவம் அறிவித்துள்ளது.

லராக் தீவு ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீர்வழியூடாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

Bootstrap