அமெரிக்காவில் பணியாற்றும் ஹெச்-1பி விசா தாரர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கான ஹெச்-4 பணி அனுமதியை ரத்து செய்ய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருந்த இந்த நடைமுறையை மாற்றியமைக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களை மட்டுமல்லாமல், இந்தியாவின் திருமண சந்தையையும், குறிப்பாக அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கான வரதட்சணை மார்க்கெட்டையும் தலைகீழாக மாற்றத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, H-4 பணி அனுமதி பெற்றவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள், அதில் 94 சதவீதம் பேர் பெண்கள். கல்வித் தகுதியும் திறமையும் வாய்ந்த இந்தியப் பெண்கள் அமெரிக்காவிற்குச் சென்ற பிறகும் சட்டப்பூர்வமாகப் பணியாற்றவும், குடும்ப வருமானத்திற்குப் பங்களிக்கவும் இந்த விசா உறுதுணையாக இருந்தது. ஆனால், இந்தப் பணி உரிமை பறிக்கப்பட்டால், இந்திய ஐடி வரன்களின் ஆதிக்கம் கொண்ட வரதட்சணை சந்தை கடுமையான சரிவைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, ஹைதராபாத் மற்றும் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க வரன்களுக்கு நிலவி வந்த மாயையும் மவுசும் தற்போது உடையத் தொடங்கியுள்ளது.
தெலுங்கு மாநிலங்களில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளுக்குத் தரப்படும் வரதட்சணை பல கோடிகளைத் தொடுவது வழக்கம். பெண் வீட்டார் அமெரிக்க டாலர் வருமானம் மற்றும் இரண்டு பேரும் சம்பாதிக்கும் வாய்ப்பை நம்பியே பல கோடி ரூபாய் ரொக்கம், நிலம், தங்க நகைகளைத் தாரை வார்த்தனர். தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவால், பெண்கள் அங்கு சென்று வீட்டில் முடங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், வரதட்சணைப் பேரங்கள் கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளன.
சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள படித்த பெண் வீட்டார், தங்களது மகள்களின் சுயமரியாதை மற்றும் கேரியருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். வேலை செய்ய அனுமதி இல்லாத H-4 விசாவில் அமெரிக்கா சென்று வீட்டுப் பராமரிப்பாளராக வாழ்வதை விட, இந்தியாவிலேயே பெங்களூரு அல்லது சென்னையில் தங்கி வேலை செய்யும் உள்நாட்டு ஐடி வரன்களையே தமிழகப் பெற்றோரும் பெண்களும் தற்போது அதிகம் விரும்புகின்றனர்.
இதனால் அமெரிக்க வரன்களின் பிரத்யேக அந்தஸ்தும், வரதட்சணைக் கோரிக்கைகளும் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளன. குஜராத் சமூகங்கள்: குஜராத்தின் பட்டேல் மற்றும் வர்த்தக சமூகங்களில் அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு எப்போதுமே தனி கிராக்கி உண்டு. வரதட்சணை மட்டுமின்றி திருமணச் செலவுகள் அனைத்தும் ஆடம்பரமாகச் செய்யப்படும். ஆனால், ஒற்றை வருமானத்தில் அமெரிக்காவில் வாழ்க்கை நடத்துவது மிகக் கடினம் என்பதாலும், கிரீன் கார்டு நடைமுறை பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதாலும் குஜராத்தி குடும்பங்கள் இத்தகைய வரன்களைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு, வீட்டு வாடகை, மருத்துவக் காப்பீடு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுகள் மிக அதிகம். அங்கு கணவன், மனைவி இருவரும் பணியாற்றினால் மட்டுமே ஆடம்பர வாழ்க்கை மற்றும் சேமிப்பு சாத்தியமாகும். H-4 பணி அனுமதி ரத்து செய்யப்பட்டால் குடும்பம் ஒற்றைச் சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனுடன் சேர்த்து, புதிய H-1B ஊழியர்களுக்கு $103,265 கட்டணம் விதிக்கும் திட்டம் மற்றும் வேலை இழந்தால் வழங்கப்படும் 60 நாள் சலுகைக் காலத்தை ரத்து செய்யும் வெள்ளை மாளிகையின் முடிவுகள் அமெரிக்க வேலைவாய்ப்பின் பாதுகாப்பை முழுமையாகக் கேள்விக்குறியாக்கியுள்ளன.
வேலை உத்தரவாதம் இல்லாத ஒரு மாப்பிள்ளைக்குக் கோடிக்கணக்கில் வரதட்சணை கொடுப்பது பெரும் ஆபத்து என்பதைப் பெண் வீட்டார் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வரவில்லை.. இது ஒரு முன்மொழிவு மட்டுமே. எனினும், இந்த விசா விவகாரங்கள் உருவாக்கியுள்ள தாக்கம் இந்தியத் திருமண சந்தையில் உள்ள 'அமெரிக்க மாப்பிள்ளை' மாயையை உடைத்து, வரதட்சணைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையை நோக்கி நகர்த்தி வருகிறது.