கண்டுகொள்ளாமல் நழுவிய புடின்

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வ குழுக் புகைப்பட நிகழ்வு முடிந்த பின்னர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைப் பின்தொடர்ந்து சென்று, அவரது கையைப் பிடித்து நிறுத்திப் பேசியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்.

இந்தச் சம்பவம் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் SCO உச்சி மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பெலாரஸ், ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் முக்கிய நிகழ்வான தலைவர்களின் அதிகாரப்பூர்வ குழுக் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புகைப்படம் எடுத்து முடித்தவுடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேடையிலிருந்து கீழே இறங்கி அங்கிருந்து வெளியேறத் தொடங்கினார். அப்போது, அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், வேகமாக புடினை நோக்கி ஓடிச்சென்றார். புடின் நடந்து சென்றுகொண்டிருந்த வேளையில், அவரது கையைத் தொட்டுத் தடுத்து நிறுத்திய ஷெரீப், அவருடன் சுருக்கமாகப் பேசத் தொடங்கினார்.

திடீரென பாகிஸ்தான் பிரதமர் தன்னை வழிமறித்ததைக் கண்ட புடின், சில வினாடிகள் அவருடன் பேசிவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த பல சந்திப்புகள் நிகழ்ந்தன. மாநாட்டு மேடைக்கு வருவதற்கு முன்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேரில் சந்தித்துக் கைகுலுக்கி, சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை குழுக் புகைப்படத்திற்கு முன்பாகவே பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மாநாட்டிற்கு முந்தைய நாள், பிஷ்கெக்கில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் புடின் இடையே விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகம் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது.

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து மோடி வலியுறுத்தல் புடினுடனான இருதரப்பு சந்திப்பின் போது, ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி மீண்டும் எடுத்துரைத்தார். போர்க்களத்தில் செலவிடப்படும் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளுகிறது என்று சுட்டிக்காட்டிய மோடி, விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த இருதரப்பு சந்திப்பு, இந்த மாத இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள வருடாந்திர பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு புடின் வருகை தரவிருக்கும் நிலையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட SCO உச்சி மாநாடு, பிராந்திய பாதுகாப்பு, இரு நாட்டுஉறவுகள் . சர்வதேச போர்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மாநாட்டு வளாகத்தில், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியைப் பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். அதேபோல், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை கட்டித்தழுவி வரவேற்ற தருணமும் அரங்கேறியது. இப்படிப்பட்ட சூழலில்தான், ரஷ்யாவுடன் உறவைப் புதுப்பிக்க முயலும் பாகிஸ்தான், புடினின் கவனத்தை ஈர்க்க மேற்கொண்ட இந்த நேரடி முயற்சி சர்வதேச தூதரக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Bootstrap