ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து நடத்தவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த ராணுவப் பயிற்சியில் அமெரிக்காவின் 'டைபன்' (Typhon) ஏவுகணை அமைப்பு பயன்படுத்தப்படுவது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஜப்பானில் வரும் செப்டம்பர் 8 முதல் 24 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் மூன்று நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,700 ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். இது இதுவரையிலான மிகப்பெரிய கூட்டுப் பயிற்சியாகும்.
இந்த ராணுவப் பயிற்சியில் முதன்முறையாக அமெரிக்காவின் இடைநிறுத்தப்பட்ட 'டைபன்' ரக ஏவுகணை அமைப்புகள் பயன்படுத்தப்பட உள்ளன. இவை SM-6 மற்றும் டொமாஹாக் (Tomahawk) க்யூயிஸ் ஏவுகணைகளை ஏவக்கூடிய வல்லமை கொண்டவை.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் மரியா சகாரோவா, மாஸ்கோவில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் இது குறித்து முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஜப்பான் தனது அமைதிவாதக் கொள்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும், ரஷ்ய எல்லையோரப் பகுதிகளில் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து ஜப்பானும் ரஷ்யாவும் பரஸ்பரம் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்ட நிலையில், தற்போது இந்த ஏவுகணை விவகாரமும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.