அடுத்தகட்ட தாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறிய ஒற்றை கருத்தால் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் களமிறங்கின. மேலும் நேட்டோ அமைப்பும் உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

அதுமட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை ரஷ்யா மீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவின் முக்கிய வருமானமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ள நிலையில், அதனை ஏற்றுமதி செய்ய மேற்கத்திய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதன் காரணமாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலேயே உக்ரைனுக்கு பிரிட்டன் அதிக ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் முக்கிய உளவுத்தகவல்களையும் பிரிட்டன் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதின் கிர்கிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், அங்கு அவர் சுமார் 45 நிமிடங்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ’உக்ரைனுக்கு பிரிட்டன் ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலடியாக பிரிட்டனில் உள்ள ராணுவத் தளங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடுமா’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு புதின், ’அது ஒரு ரகசியம். ராணுவ ரகசியம்’ என்று பதிலளித்துள்ளது ஐரோப்பாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே புதின் உக்ரைனுக்கு உதவும் நாடுகள் மீது பதிலடி கொடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக புதினின் இந்த கருத்து அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Bootstrap