பேரழிவின் விளிம்பில் பனிப் பாறைகள்..

கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தில் பனிப்பாறையில் ஏற்பட்ட வெடிப்பு பெரும் வெள்ளமாக உருவெடுத்து நேபாளத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. பனி பாறையில் ஏற்பட்ட வெடிப்புக்கு எல் நினோ, உலக வெப்பமயமாதல் போன்றவை காரணமாக கூறப்பட்டாலும், இதற்கு மனித சிறுநீரும் ஒரு காரணமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான Regional Environmental Change என்ற அறிவியல் ஆராய்ச்சி இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

இமயமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், அங்கு முறையான கழிப்பறை வசதிகள் இல்லாததால் அவர்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழித்து வருகின்றனர்.

அதிலும் எவரெஸ்ட் உள்ளிட்ட மலையேற்றப் பாதைகளில் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் தினம்தோறும் வருகை தருகின்றனர். அவர்கள் திறந்தவெளியில் கழிக்கும் சிறுநீர், அங்குள்ள பனிப்பாறைகளின் வெப்பநிலையை அதிகரித்து அவை வேகமாக உருகுவதற்கு வழிவகுக்கிறது.

மனித சிறுநீரில் உள்ள அதிகப்படியான யூரியா, அம்மோனியா மற்றும் சோடியம் போன்ற உப்புக்கள் உறைந்த பனியின் கட்டமைப்பைச் சிதைத்து அதன் கடினத்தன்மையை பாதிக்கிறது. நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பனிபாறை வெடிப்பை சுற்றியுள்ள மலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளும், மலையேற்ற வீரர்களும் அதிக அளவில் சென்று வரும் நிலையில், இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று Regional Environmental Change இதழின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இது மட்டுமே காரணம் இல்லை என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது.

Bootstrap