பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக முப்படைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் தலைமை தளபதியாக அசிம் முனீர் பொறுப்பேற்றுள்ள நிலையில், இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பல முறை ராணுவ தளபதிகள் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அப்படி ஒரு நிலை வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அந்நாட்டின் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் ராணுவத்தின் பங்கு இருந்ததாக விமர்சனம் எழுந்தது.
மேலும் அடுத்த வந்த புதிய ஆட்சியாளர்கள் ராணுவத்துக்கும், ராணுவ தளபதிக்கும் அதிக அதிகாரங்களை கொடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பாகிஸ்தான் ராணுவத்தளபதி அசிம் முனீரின் (Asim Munir) அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனிடையே பாகிஸ்தானில் சமீபத்தில் சில முக்கிய சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதன்படி ராணுவத் தளபதி அசிம் முனீர் முப்படைகளுக்கும் சுப்ரீம் கமாண்டராகக் பதவி உயர்த்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. அதோடு, முன்பு பிரதமரின் தலைமையின் கீழ் இருந்த NCA என அழைக்கப்படும் 'தேசிய கட்டளை அமைப்புக்கு மாற்றாக NSC என அழைக்கப்படும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, அணுஆயுதங்களை நிர்வகிக்கும் நேரடி செயல்பாட்டு அதிகாரம் அதன் கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும், இந்த NSC அமைப்பின் தலைமை பதவி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அணு ஆயுதங்களை இயக்கும் அதிகாரமும் ராணுவ தளபதியின் வசம் சென்றுள்ளது.
இந்த நிலையில், புதிதாக கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தின் படி, தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைமை தளபதியாக அசிம் முனீர் இன்று பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர்களாக இருந்த அய்யூப் கான் (Ayub Khan), யாகியா கான் (Yahya Khan), ஜியா உல் ஹக் (Zia-ul-Haq), பர்வேஸ் முஷாரஃப் (Pervez Musharraf) ஆகியோர் தரைப்படையின் தளபதியாக இருந்து பின்னர் ஆட்சியை பிடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில், அசிம் முனீரும் விரைவில் பாகிஸ்தானின் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து, ராணுவ ஆட்சியை அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. அசிம் முனீர் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரானக் கடுமையான கருத்துகளையும், அணுஆயுத எச்சரிக்கைகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அணுஆயுதங்களை இயக்கும் அதிகாரம் முழுமையாக ராணுவத்திடம் குவிவது இந்தியாவுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.