”Red-Light Area-வுலதான் அதிக ஓட்டு வந்துச்சு" - நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!

நாக்பூரில் படித்த மக்கள் வாழும் வசதியான பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வாக்குகள் கிடைப்பதாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் 92% வாக்குகள் கிடைப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர், நிதின் கட்கரி. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், நாக்பூரில் படித்த மக்கள் வாழும் வசதியான பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வாக்குகள் கிடைப்பதாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி மற்றும் சிவப்பு விளக்குப் பகுதிகள் உள்ள இடங்களில் 92% வாக்குகள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கான காரணத்தை விளக்கிய அவர், "நான் அரசியலில் நல்லவை, கெட்டவை என அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன். இந்தப் புள்ளிவிவரங்கள் தனக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இடையே தனிப்பட்ட தொடர்போ அல்லது அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவோ இருப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது.

அப்பகுதிகளில் தான் மேற்கொண்ட சாலை கட்டமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் காரணமாகவே அங்குள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற்று அதிக வாக்குகளைப் பெற முடிந்தது” எனத் தெளிவுபடுத்தினார். மேலும் அவர், ”வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்டாலும், தங்களுக்கு யார் உண்மையாக வேலை செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டுதான் வாக்களிப்பார்கள்” என்றவர், கடந்த காலத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது வாக்காளர்களுக்கு தலா 1 கிலோ ஆட்டிறைச்சி வழங்கியதாகவும், ஆனால் அந்தத் தேர்தலில் தான் தோல்வியடைந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். சில நாட்களுக்கு முன்பு மற்றொரு நிகழ்வில் பேசிய கட்கரி, "என்னால் இனி பழையபடி தீவிரமாகப் பணியாற்ற முடியாது. பொறுப்புகளைப் புதிய தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Bootstrap