உயிரிழந்த ராணுவ வீரர்! மனைவிக்கு இழப்பீடு வழங்க மறுத்த அமெரிக்கா!

மத்தியக் கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய மோதல் 6 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இப்போரில், ஆயிரக்கணக்கான ஈரானிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கைகளின் போது, 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், போரில் உயிரிழந்த அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவரின் மனைவிக்கு, “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக போரை அறிவிக்கவில்லை” என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் இழப்பீட்டுச் சலுகைகளை வழங்க மறுத்திருக்கும் சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க விமானப்படையில் 33 வயதான மேஜர் அலெக்ஸ் கிளின்னர் (Alex Klinner) என்பவர் பணியாற்றி வந்தார். ஈரானுக்கு எதிரான போரிலும் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மேற்கு ஈராக்கில், அவர் சென்ற KC-135 ரீஃபியூலிங் (KC-135 refueling aircraft) ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், கிளின்னர் உட்பட 6 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, தனது கணவரை இழந்த அவரது மனைவி லிபி கிளின்னர், ராணுவ நிர்வாகத்திடம் கணவருக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது, அமெரிக்கா ’ஈரானுக்கு எதிரான போரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை’ என்பதால், சில போர் தொடர்பான சலுகைகள் கிடைக்காது என அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த லிபி, சமூக வலைதளத்தில் தனது வேதனையை பகிர்ந்தார். அந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர், குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் கிடைப்பதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் லிபியை தொடர்புகொண்டு, முன்பு வழங்கப்பட்ட தகவல் தவறானது என விளக்கம் அளித்தனர். மேலும், அவரது கணவரின் இறுதி சம்பளத்தில் மாதம் 225 டாலர் மதிப்புள்ள காம்பாட் பே அதாவது போர்க்கால ஊதியம் மற்றும் அதற்கான வரிச்சலுகைகள் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், உயிரிழப்புகள் அதிகரித்துள்ள போதிலும், ஈரானுக்கு எதிரான தற்போதைய மோதலை அமெரிக்கா தொடர்ந்து “போர்” என அதிகாரப்பூர்வமாக குறிப்பிடுவதைத் தவிர்த்து வருகிறது. அதற்குப் பதிலாக, இதனை “வெளிநாட்டு நடவடிக்கை” என்றே வகைப்படுத்தி வருவதே இப்பிரச்னைக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

Bootstrap