இலங்கையின் எல்லைக்கு அப்பால் ஈரானிய கப்பல்கள் : அமெரிக்க தூதரகம் வழங்கிய தகவல்!

இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சகங்களுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதுடன், இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினரால் குறித்த கப்பல்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், இலங்கையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் மொத்தம் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் தொடரும் நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள இந்தக் கப்பல்களில் பல ஈரானியக் கொடியைத் தாங்கிய கப்பல்களும், ஏனைய வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த கப்பல்களிலிருந்து இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு வசதியோ அல்லது உதவியோ கோரப்படவில்லை என்றும், அவற்றுக்கு எந்தவிதமான வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதைத் தவிர, இலங்கை அரசாங்கம் அவற்றில் வேறு எந்த வகையிலும் தலையிடவில்லை என்றும், மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Bootstrap