அணுவாயுதம் வைத்திருப்பவர்களும் ஈரானின் நாகரிகத்தை அச்சுறுத்துவோரும் நியாயம் பேச தகுதி அற்றவர்கள் - ஈரான் துணை ஜனாதிபதி கண்டனம்

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எந்த அருகதையும் இல்லை என்று ஈரானின் முதல் துணை ஜனாதிபதி மொஹமட் ரெசா அரேப் (Mohammad Reza Aref ) தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) ஆளுநர்கள் குழு ஈரானுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் இரட்டை வேடத்தையே காட்டுவதாகவும், சமாதான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் ஈரான் உறுதியாகப் பின்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், ஹிரோஷிமா தாக்குதலை நடத்தியவர்களும், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியவர்களுமே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர் என மொஹமட் ரெசா அரேப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரானின் உள்கட்டமைப்புகளையும் நாகரிகத்தையும் அச்சுறுத்துபவர்களுக்கு நியாயம் பேசத் தகுதி கிடையாது என்று குறிப்பிட்ட அவர், ஈரானிய மக்கள் தங்கள் சட்டப்பூர்வ உரிமைகளுக்காகவும் அமைதியான அணுசக்திப் பாதையிலும் உறுதியாக நிற்பார்கள் என தெரிவித்துள்ளார்.

ஐநா அணுசக்தி ஆய்வாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஈரானை ஐநா பாதுகாப்புப் சபைக்கு அனுப்பக் கோரி அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளால் இந்தத் தீர்மானம் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் அணுசக்தி தொடர்பான ராஜதந்திர மோதல்கள் மற்றும் ஐநா தீர்மானங்கள் இந்தப் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

Bootstrap