உக்ரைன் மீது ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரில், வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 67 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. தாக்குதல் இடம்பெற்ற போது,வீதிகளில் மக்கள் அதிகளவில் இருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சர் இவான் வைகிவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த வார தொடக்கத்தில் ஸபோரிஷியா மற்றும் சுமி ஆகிய நகரங்களில் உள்ள மேலும் இரண்டு வணிக வளாகங்களும் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மறுபுறம், புதன்கிழமை இரவு சோச்சி நகரில் உக்ரைன் கடல்வழி ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 28 பேர் காயமடைந்ததுடன், உக்ரைன் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட மேலும் 3 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது படையெடுப்பை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா–உக்ரைன் இடையே முழு அளவிலான போர் நீடித்து வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுப்பிய பிரதிநிதிகள் முன்னெடுத்த புதிய சமாதான முயற்சி, கடந்த வார இறுதியில் மொஸ்கோவில் புட்டினுடனும், கீவ்வில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், குறிப்பிடத்தக்க உறுதியான முடிவுகள் எதையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

இதனிடையே, உக்ரைனின் மாநில அவசர சேவை வெளியிட்டுள்ள காணொளி மற்றும் புகைப்படங்களில், பாவ்லோஹ்ராட் நகர வீதியில் புகைமூட்டத்திற்கு மத்தியில் தீப்பற்றி எரியும் வாகனங்கள் மீது தீயணைப்பு வீரர்கள் நீரைப் பாய்ச்சி தீயை அணைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Bootstrap