உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மேலும், BRICS நாடுகளுடன் வணிகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
BRICS வணிக மாநாட்டில் உரையாற்றிய புடின், “உலகம் ஆழமான மாற்றங்களை எதிர்கொள்கிறது. இந்த சூழலில், நாங்கள் எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்புக்கு பங்களிக்கவும், ஆர்க்டிக் போக்குவரத்து வழி மற்றும் வடக்கு-தெற்கு போக்குவரத்து வழி போன்ற நம்பகமான லாஜிஸ்டிக் பாதைகளை உருவாக்கவும் தயாராக உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், சுற்றுலா, தொழில், வணிகம், மனிதவள பயிற்சி, சுய இயக்க வாகனங்கள், ஸ்மார்ட் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ரஷ்யா புதிய முயற்சிகளை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் மேற்கு ஆசியா நெருக்கடி சூழலில், புடின் மேற்கத்திய நாடுகளை நேரடியாக பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், மேற்கத்திய தடைகள் பொருளாதார ஒத்துழைப்பை குறைக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன எனவும், இது உலகளாவிய போட்டியை பாதிக்கிறது எனவும் புடின் குற்றம்சாட்டினார்.
இந்த உரை, ரஷ்யா BRICS நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்தும் முயற்சிப்பதையும், உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதையும் வெளிப்படுத்துகிறது.