டொனால்ட் ட்ரம்பின் வருகை: அயர்லாந்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அயர்லாந்து வருகையையொட்டி, அந்த நாட்டு வரலாற்றிலேயே மிகப்பாரிய பாதுகாப்பு மற்றும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் டப்ளின் மற்றும் கிளேர் பகுதிகளில் காவல் துறையினர் 10,000-க்கும் மேற்பட்ட 12 மணி நேர பணிச் சுழற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த பயணத்துக்காக, சிறப்புப் பணி ஒதுக்கீடுகள், மேலதிக நேர வேலைகள் மற்றும் பிற மாவட்ட காவல் படையினரை இங்கு வரவழைக்கும் வகையில் 'சிறப்பு நிகழ்வு' (Extraordinary event) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அயர்லாந்தின் பாதுகாப்புப் படைகள், அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் (Secret Service) மற்றும் பிரித்தானியக் காவல்துறை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து தமது பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளன.

சிறப்புத் தந்திரோபாயப் படை (Special Tactics and Operations Command), ஆயுதம் ஏந்திய தனிப்படை மற்றும் உளவுப் பிரிவுகள் இதில் களமிறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி உண்டு.

என்ற போதிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கவோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியின் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ முயல்பவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அயர்லாந்து காவல்துறை ஆணையர் ஜஸ்டின் கெல்லி எச்சரித்துள்ளார்.

நாட்டை சென்றடையும் ட்ரம்ப்பை அயர்லாந்தின் துணைப் பிரதமர் சைமன் ஹாரிஸ் (Simon harris) வரவேற்பார்.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி கேத்தரின் கான்னோலி மற்றும் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ஆகியோரைச் சந்திக்கும் ட்ரம்ப், பின்னர் டூன்பெக் (Doonbeg) நகரில் அமைந்துள்ள தனது கோல்ஃப் மைதானத்திற்குச் செல்லவுள்ளார்.

Bootstrap