மாரவில கடல் பகுதியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று (12) பிற்பகல் இச்சம்பவத்தில் காணாமல் போனவர், உயர்தர கணிதப் பிரிவில் பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற குளியாபிட்டிய, அனுக்கனையைச் சேர்ந்த வித்தானகே ஷாலித தனுர்தர மதுஷான் என்ற 21 வயது இளைஞராவார்.
இவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் குளியாபிட்டியவிலிருந்து மாரவில கடற்கரைக்குச் சுற்றுலா வந்துள்ளனர். கடற்கரையில் பாறைகள் அமைக்கப்பட்ட பகுதியில் மணல் திட்டில் நின்றிருந்தபோது, சீறிப்பாய்ந்து வந்த இராட்சத அலை ஒன்றில் சிக்கி இவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
பிரதேசவாசிகள் இணைந்து இவரைக் காப்பாற்ற முயன்றபோதிலும், அவர் கடலில் மாயமாகியுள்ளார். இவரைக் காப்பாற்றச் சென்ற மற்றொரு இளைஞர் நூலிழையில் உயிர்தப்பினார்.
இதேவேளை, நேற்று பிற்பகலிலேயே அதே பகுதியில் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட 3 பெண்களைப் பிரதேசவாசிகள் உடனடியாகச் செயற்பட்டு மீட்டுள்ளனர்.
காணாமல் போன இளைஞரைத் தேடி கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இதுவரை 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மாரவில கடலில் நீராடிய 15 பேர் அலைகளில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் கடலில் இறங்குவதையோ, நீராடுவதையோ தவிர்க்குமாறு மாரவில பொலிஸாரால் வைக்கப்பட்ட எச்சரிக்கைப் பலகைகள், அங்கு வரும் சிலரால் சேதப்படுத்தப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.