ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்துள்ளனர்” என கெஷ்ம் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது போன்ற விவரங்களை அவர்கள் குறிப்பிடவில்லை.

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள மிகப்பெரிய தீவான கெஷ்மைச் சுற்றி நேற்று இரவு பல தாக்குதல்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஓமனுக்கு ஈரானுக்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மோதலுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த போர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இந்த போரால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டுமே கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Bootstrap