பிரிக்ஸ் மாநாட்டு விருந்தில் சைவ உணவு

சீன ஜனாதிபதி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் பிரிக்ஸ் மாநாட்டின் இரவு விருந்தை புறக்கணித்தற்கு சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது தான் காரணமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

இந்தியாவின் தலைமையிலான 18வது பிரிக்ஸ் மாநாடு டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு டெல்லியில் உள்ள 'பாரத் மண்டபத்தில்' சனிக்கிழமை இரவு பிரதமர் மோடி விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்தின் மெனு பட்டியலில் தொடக்க உணவுகள் முதல் இனிப்பு வரை அனைத்தும் இந்தியாவின் பாரம்பரிய சைவ உணவுகளாகவே இருந்தது.

மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வருகை தந்த நிலையில், அந்த நாடுகளின் பிரதான உணவுகளில் ஒன்று கூட இடம்பெறாமல் முழுக்க சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

சைவ உணவு பழக்கம் உடையவரான மோடி, இந்துத்துவாவின் உணவு பழக்கமான சைவத்தை ஒட்டுமொத்த இந்தியர்களின் உணவு பழக்கமாக உலகிற்கு காட்ட முயற்சிக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது ஆகிய இருவரும் இரவு விருந்தில் கலந்து கொள்ளாததற்கு சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டதுதான் காரணமா என்ற விவாதத்தையும் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.

பிரிக்ஸ் மாநாட்டின் உணவுப் பட்டியல் குறித்து நேரடியாக குறிப்பிடாத ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், 'சோலே படூரே' (Chole Bhature) உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "தெரிந்துகொள்ளுங்கள்: 80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்.

இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை. என் சகோதரி செய்யும் சோலே படூரேவும் மிகவும் சுவையாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் முன்னாள் எம்.பி ஜவஹர் சர்க்கார், 2010 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்காக நடத்தப்பட்ட அரசு விருந்தின் உணவுப் பட்டியலைப் பகிர்ந்து, முழு சைவ விருந்துகள் ஒரு ராஜதந்திரத் தவறு என்று குறிப்பிட்டார்.

மேலும், "மோடியின் மிக முக்கியமான விருந்தினர்களான சீனாவின் ஷி ஜின்பிங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஆகியோர், மோடியால் கட்டாயப்படுத்தப்பட்ட சைவ விருந்தைத் தவிர்த்துவிட்டனர். என்னவொரு வெட்கக்கேடு. பிரதமர் மோடி தனது வாடிக்கையாளரான சைவ பக்தர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மட்டுமே, கடந்த 12 ஆண்டுகளாகத் தனது வெளிநாட்டு விருந்தினர்களைத் தள்ளிவைத்து, இதைச் செய்து வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

ஏஐஎம்ஐஎம் தலைவர் வாரிஸ் பதான் தனது எக்ஸ் பக்கத்தில், "நாம் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றி அதிகம் பேசுகிறோம், ஆனால் இந்த உணவுப் பட்டியலில் அந்தப் பன்முகத்தன்மை நீக்கப்பட்டுள்ளது.

நீங்கள் சைவ உணவை ஊக்குவிக்கலாம், ஆனால் இந்தியாவின் உணவு கலாசாரத்தை சைவ உணவோடு மட்டும் சுருக்கிவிடாதீர்கள். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் அசைவ உணவு உண்கிறார்கள். நம் சமையலில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை.

மட்டன் மசாலா ஃப்ரை, ஹைதராபாதி பிரியாணி, தந்தூரி சிக்கன், பட்டர் சிக்கன், கோவா மீன் குழம்பு போன்ற பிரபலமான இந்திய உணவுகள் மூலம் இந்தியாவின் முழுமையான சுவைகளை அவர்களுக்கு நாம் வழங்கியிருக்க வேண்டும்.

இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது மொழிகள் மற்றும் கலாசாரங்களில் மட்டுமல்ல, நம் உணவுத் தட்டுகளிலும் உள்ளது என்பதை உலகிற்குச் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்ட இரவு உணவுப் பட்டியலை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதை என்னால் நம்ப முடியவில்லை.

எங்கள் விருந்தினர்கள் இந்திய சைவ உணவை ரசித்து உண்டனர். அந்த உணவுகள் சுவை மற்றும் ஊட்டச்சத்து பன்முகத்தன்மை கொண்டவை, அத்துடன் பல்வேறு பிராந்தியங்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பவை" என்று தெரிவித்துள்ளார்.

Bootstrap