கடலுக்கு அடியில் தங்கச் சுரங்கம்.. சீனாவுக்குக் கிடைத்த பெரிய புதையல்!

பசிபிக் பெருங்கடலில் தங்கம் மற்றும் வெள்ளிp படிமங்கள் கொண்ட மாபெரும் ஆழ்கடல் கனிம படுகையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில், இதுதொடர்பான விவாதங்களும் தொடங்கியுள்ளன.

சீனாவின் 'சியாங் யாங் ஹாங் 10' (Xiang Yang Hong 10) என்ற ஆராய்ச்சிக் கப்பல் மூலம் 18 நாட்கள் நடத்தப்பட்ட ஆய்வில், 7 நீர்மூழ்கிச் சோதனைகள் மூலம் பசிபிக் பெருங்கடலில் தங்கம் மற்றும் வெள்ளிப் படிமங்கள் கொண்ட மாபெரும் ஆழ்கடல் கனிம படுகையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, சீனாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) 700 முதல் 1,500 மீட்டர் ஆழத்தில், அதாவது மேற்கு பசிபிக் பெருங்கடலின் பேக்-ஆர்க் பாசின் (Back-arc basin) மண்டலத்தில் அமைந்துள்ளது. கடலடி வெப்பநீரூற்றுப் பகுதிகளில் சல்பைடு படிமங்களால் உருவான 3 பெரிய கூம்பு வடிவ பாறைப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

தங்கத்துடன் தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்த கால்கோபைரைட், பைரைட் மற்றும் ஸ்பேலரைட் போன்ற உயர் மதிப்புள்ள கனிமங்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வின்படி, ஒரு டன் தாதுவில் 15.4 கிராம் வரை தங்கமும், ஒரு டன் தாதுவில் 1.27 கிலோகிராம் (1,271 கிராம்) வெள்ளியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. நிலப்பரப்பில் உள்ள பல சுரங்கங்களைவிட இதில் கனிமங்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், வணிகரீதியாக இது மிகப்பெரிய மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. இவ்வளவு ஆழத்தில் உள்ள கனிமங்களை வெட்டி எடுப்பது கடல்சார் சூழலியல் மண்டலத்தைப் பாதிக்கும் என்பதால் சர்வதேச அளவில் எதிர்ப்புகளும் விவாதங்களும் தொடங்கியுள்ளன.

Bootstrap