யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நேரடியாக மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதுகாப்புச் சபையின் 2140 மற்றும் 2216 ஆகிய தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதன் மூலம் ஹூதி அமைப்பிற்கு ஆயுதங்கள், நிதி மற்றும் தொழில் நுட்ப உதவி செல்பவை தடைசெய்யப்பட வேண்டும் என அந்த நாடு கோரியுள்ளது.
மசகு எண்ணெய் தாங்கிகள் மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் மீது ஹூதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய ஆற்றல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
ஹூதி அமைப்பினர் தங்கள் படை முன்னேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், புதிதாகக் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறி, தாக்குதல்களை முற்றுப்புள்ளியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.