ரூபாய் 5000 கோடி சொத்து இருந்தாலும் தெருவில் பிச்சை எடுத்த எம்.எல்.ஏ

மும்பையில் 5000 கோடி  மதிப்பு கொண்ட கோடீஸ்வர பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ஒரு கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த அந்த விசித்திரமான நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநிலத்தின் மிக முக்கிய கோடீஸ்வர அரசியல்வாதிகளில் ஒருவரான பராக் ஷா இவர் மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். தொழிலதிபரான இவருக்கு பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது.

இவ்வளவு ஆடம்பர வசதிகள் இருந்தாலும் அவர் ஏன் பிச்சைக்காரராக மாறினார் என்கின்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஜெயின் சமூகத்தை சேர்ந்த இவர் தங்களுடைய புனித கால வழிபாட்டின் பொழுது தன்னுடைய ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்.

அப்போது அவரது குரு வாழ்க்கையில் எதார்த்தமான நிலையையும், ஏழை மக்களுடைய கஷ்டங்களையும், மனிதர்களுடைய உண்மையான முகங்களையும் நேரில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திருக்கிறார்.

அவ்வாறு குருவினுடைய கட்டளையின் படி தன் வசம் இருந்த சொகுசு கார்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் விலை உயர்ந்த ஆடைகள் என எல்லாவற்றையும் ஒரு நாள் முழுவதும் துறந்து வாழ எண்ணினார்.

இதை அடுத்து மக்கள் யாரும் அவரை அறிந்து கொள்ள முடியாத அளவு முகத்தில் அழுக்குகளை பூசிக்கொண்டு கிழிந்த ஆடைகளை அணிந்தபடி பராக் ஷா மும்பை காட் கோபர் வீதிகளில் பிச்சைக்காரராக வலம் வருகிறார். வீதியோரம் அமர்ந்து கையேந்தி யாசகம் பெறுகிறார். சொந்த செக்யூரிட்டியே விரட்டி இருக்கிறார்.

இந்த ஒரு நாள் பிச்சைக்கார வாழ்க்கையில் அவருக்கு பல வகையான அதிர்ச்சிகரமான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. இது குறித்து அவர் கூறுவது, தான் ஒரு பிச்சைக்காரர் வேடம் அணிந்து தன்னுடைய சொந்த அலுவலக குடியிருப்பு வளாகத்திற்குள் செல்கின்ற பொழுது அங்கு வேலை பார்க்கக் கூடிய அவரது சொந்த செக்யூரிட்டியே என்னை அடையாளம் தெரியாமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் என்கிறார்.

ஆனால், எப்போதும் உதவி செய்யக்கூடிய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கையேந்தி நின்று இருக்கிறார். ஆனால், அவரும் அடையாளம் தெரியாமல் விரட்டி இருக்கிறார். ஆனால், அதே நேரத்தில் மும்பை வீதியில் சில இளைஞர்கள் அவருடைய நிலையை கண்டு பரிதாபம் அடைந்து உணவும், இருபது ரூபாய் பணமும் கொடுத்து இருக்கிறார்கள்.

அங்கு இருக்க கூடிய சமோசா வியாபாரி எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அவருக்கு இலவசமாக சமோசா கொடுத்து உபசரித்து இருக்கிறார். பணம் பதவி புகழ் எல்லாம் மனிதர் வாழ்க்கையில் அகங்காரத்தை உண்டாக்கி விடுகிறது.

இந்த பிச்சைக்காரர் அனுபவம் அவருக்கு அகங்காரத்தை அழித்து விட்டதாகவும் இவர் பதவியில் இருக்கின்ற பொழுது பல மணி நேரம் காத்திருந்தவர்கள் இவருடைய தகுதியை இழந்து ஏழையாக நின்றபொழுது அவர்களை விட உயர்ந்தவர்களாக நினைத்து விரட்டி இருக்கிறார்கள்.

அவர் இறுதியாக கூறுவது, இந்த சமோசா வியாபாரி போன்ற எளிய மனிதர்களிடம் தான் உண்மையான அன்பு இருக்கிறது என்றும், இந்த சமூகம் மனிதர்களை மதிப்பதே இல்லை என்றும், ஒருவரிடம் இருக்கக்கூடிய பணம் மற்றும் பதிவியை மட்டும் தான் வைத்து அவர்களை மதிக்கிறார் என்றும், அவருடைய அந்த பிச்சைக்காரர் வாழ்க்கை அவருக்கு புரிய வைத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

கோடீஸ்வரர் எம்எல்ஏ ஒருவர் இவ்வாறு பிச்சைக்காரராக மாறி வலம் வந்த இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாகப் பரவி பொதுமக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bootstrap