காண்டாமிருகங்களைக் கொல்ல குறிவைத்த வேட்டைக்காரர்கள்

காண்டாமிருகங்களைக் கொல்ல வேட்டைக்காரர்கள் குறிவைத்த நிலையில், திடீரென யானைகள் அவர்களை தாக்கிய ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வனவிலங்குகள் பூங்கா ஒன்றில் நுழைந்த சட்டவிரோத வேட்டைக்காரர்கள் இருவர், காண்டாமிருகங்களை அவற்றின் கொம்புகளுக்காக கொல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

தென்னாப்பிரிக்காவிலுள்ள Kruger வனவிலங்குகள் பூங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தண்ணீர் குடிப்பதற்காக குட்டை ஒன்றில் காண்டாமிருகங்கள் திரண்டிருக்க, வேட்டைக்காரர்கள் அந்த காண்டாமிருகங்களை தங்கள் துப்பாக்கியால் குறிவைத்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், தங்களுக்குப் பின்னால் யானைக் கூட்டம் ஒன்று மரங்களுக்கு நடுவே மறைந்திருப்பதைக் காணத் தவறிவிட்டார்கள் அந்த வேட்டைக்காரர்கள்.

வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் குறிபார்த்துக்கொண்டிருக்க, திடீரென வேகமாக ஓடிவந்த யானைக் கூட்டம் அவர்கள் இருவரையும் துரத்தத் துவங்கியுள்ளது.

அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட, மற்றவர் காண்டாமிருகம் ஒன்றை சுட்டுள்ளார்.

சுடுவதற்காக அவர் நிற்க, அவரை சூழ்ந்துகொண்ட யானைகள் காலால் அவரை மிதித்துக் கொன்றுள்ளன.

அந்த யானைக்கூட்டம் அங்கிருந்து அகன்றபோது, அங்கு அந்த நபரின் இரத்தம் தோய்ந்த உடைகளும் ஒரு பெரிய இரத்தக்கரையும் மட்டுமே மீதமிருந்ததாக வனவிலங்குகள் பூங்கா ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த இருவரும் ஏற்கனவே காண்டாமிருகங்களைக் கொல்வதை அந்த யானைகள் பார்த்திருக்கக்கூடும் என்கிறார் பூங்கா செய்தித்தொடர்பாளர்.

யானைகள் நல்ல ஞாபக சக்தி உடையவை என்று கூறப்படுவதுண்டு. ஆக, அந்த இருவரும் காண்டாமிருகங்களைக் கொல்ல குறிபார்க்க, அவர்களை அடையாளம் கண்டுகொண்ட இந்த யானைகள், காண்டாமிருகங்களைக் காப்பாற்றுவதற்காக அந்த வேட்டைக்காரர்களைத் தாக்க வந்துள்ளன என்கிறார் அவர்.

அந்த வேட்டைக்காரர்களில் இரண்டாவது நபர் உயிர் தப்பிய நிலையில், பூங்கா அலுவலர்கள் அவரைப் பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளார்கள்.

ஒரு விலங்கினத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக, மற்றொரு வகை விலங்கினம் துணிந்து இறங்கி செயல்பட்ட இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bootstrap