முல்லைத்தீவில் காணிகளை விடுவிக்க களஆய்வு

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில், வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் இணைந்த களஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம், வனவளத் திணைக்களம், பாராளுமன்ற உறுப்பினர் துரைரராசா ரவிகரன், காணிகளுக்குரிய மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த பகுதிக்கு நேரில் சென்று இணைந்த களஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறிப்பாக கடந்த 1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் மதவளசிங்கன்குளம் கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மக்களுக்கு உப உணவுப் பயிற்செய்கைக்கென வழங்கப்பட்ட காணிகளை தற்போது வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது.

இந்நிலையில் காணிகளுக்குரிய பொதுமக்கள் குறித்த வனவளத்திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இத்தகையசூழலில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 15.05.2026 அன்று இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மதவளசிங்கன்குளம் பகுதியில் உபஉணவுப் பயிற்செய்கைக்கென மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனது வலியுறுத்தலுக்கமைய வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை வனவளத்திணைக்களம், பிரதேசசெயலகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், காணிகளுக்குரிய பொதுமக்கள் இணைந்து இணைந்த களஆய்வொன்றை மேற்கொள்வதென குறித்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக கடந்த 15.09.2026 அன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இணைந்த களஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap