பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கடுமையான தட்டம்மை நோய்த் தொற்றால் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், அவசர தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏற்கனவே 19.8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், நாளாந்தம் சுமார் 1,000 புதிய சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்று வழக்குகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைச் சென்றடையும் வகையில், தடுப்பூசி திட்டத்தின் தீவிர கட்டத்தை செப்டெம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்க பங்களாதேஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை தட்டம்மை ஒழிப்பில் பங்களாதேஷ் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தது. எனினும், மார்ச் மாதத்துக்குப் பின்னர் அதிக தொற்றுத்தன்மை கொண்ட இந்த நோய் 1,94,000க்கும் மேற்பட்ட மக்களைப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் அதிக மக்கள்தொகை மற்றும் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வழக்கமான தடுப்பூசி திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் ஆகியவை தற்போதைய நிலைமை மோசமடைய காரணமாக அமைந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய பின்னர் ஆட்சிக்கு வந்த இடைக்கால அரசாங்கம் புதிய தடுப்பூசி விநியோகஸ்தர்களைத் தேடியதால் தடுப்பூசி கொள்வனவு தாமதமானதாகவும் யுனிசெஃப் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், முன்னாள் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதாக மறுத்துள்ளனர்.
பதிவாகியுள்ள தட்டம்மை நோயாளிகளில் 83 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகள் என்றும், 10 சதவீதமானோர் பச்சிளம் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக தட்டம்மை நோய்த்தொற்று கடுமையான சிக்கல்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.