பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கனடா விமான நிலையமொன்றிலிருந்து 400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விலக்கிக்கொண்டுள்ளார்கள்.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன.
கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர் மோசடியாளர் என்பது.
அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு அப்போதே சுமார் 20 மில்லியன் டொலர்கள். அத்துடன், மற்றொரு பார்சலில் 2 மில்லியன் டொலர்கள் கரன்சியும் இருந்துள்ளது.
சினிமா பாணியில் நடந்த அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 9 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், ரொரன்றோவைச் சேர்ந்த Ali Raza (40) என்னும் நபர், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை, Ali Razaவுக்கு எதிரான வழக்கு, சூழ்நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, அரசுத் தரப்பு அவர் மீதான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது. தீர்ப்பைக் கேட்ட Ali Raza, தான் நிரபராதி என்றும், தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
என்றாலும், இந்த வழக்கு, நகைத் தொழில் செய்யும் Ali Razaவின் நற்பெயருக்கு களங்கத்தை உருவாக்கிவிட்டது என்றும், அவருக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ள அவரது சட்டத்தரணியான Brij Mohan என்பவர், அவர் தனது நற்பெயரை திரும்பப் பெற மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறியுள்ளார்.