உலகளாவிய பொருளாதார அழுத்தம்: அதிரடி முடிவெடுத்த ஜப்பான் வங்கி!

ஜப்பான் மத்திய வங்கி, தனது கொள்கை வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகளால் அதிகரித்து, 1.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இதன்படி, ஜப்பானில் கடன் பெறுவதற்கான செலவு கடந்த 31 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மட்டத்தை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டில் நிலவும் பணவீக்கம், ஊதிய உயர்வு மற்றும் அமெரிக்காவிடமிருந்து ஏற்படும் பொருளாதார அழுத்தம் உள்ளிட்ட காரணிகள் வட்டி விகித உயர்வுக்கான பின்னணியாகக் குறிப்பிடப்படுகின்றன.

ஜப்பான் மத்திய வங்கி இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்த நிலையில், தற்போதைய தீர்மானத்தின் மூலம் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த மிகக் குறைந்த வட்டி விகிதக் கொள்கையிலிருந்து மேலும் விலகியுள்ளது.

எரிசக்தி விலை உயர்வு, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் மற்றும் நாட்டின் பணவீக்கம் 2 சதவீத இலக்கை விட அதிகமாகக் காணப்படுவது ஆகியவை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தில் அடிப்படை நுகர்வோர் பணவீக்கம் 2 சதவீத இலக்கை அண்மித்த மட்டத்தில் நிலையாக இருந்ததாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

உணவு மற்றும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளை நிறுவனங்கள் நுகர்வோருக்கு மாற்றி வருவதும் பணவீக்கத்தில் தாக்கம் செலுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பானில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணமாக ஏற்படும் ஊதிய உயர்வு தற்காலிகமான ஒன்றாகக் கருத முடியாத அளவுக்கு, கட்டமைப்பு ரீதியிலான காரணியாக இருப்பதாக ஜப்பான் மத்திய வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் கோஜி நகமுரா தெரிவித்துள்ளார்.

Bootstrap