பாகிஸ்தான் நாட்டில் புனித மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் என்ற பகுதியில், இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்காக மசூதி ஒன்று அமைந்துள்ளது. இந்த மசூதியில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில், பல்வேறு இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், காவல்துறை தலைமையகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அந்த மசூதிக்கு, வெள்ளிக்கிழமையான இன்று அதிக அளவிலான இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வந்துள்ளனர். அப்போது, வெடிமருந்துகள் முழுமையாக நிரப்பப்பட்ட கார் ஒன்றை ஒருவர் ஓட்டிவந்து, மசூதியின் நுழைவு வாயிலில் மோதியுள்ளார்.

இதன்காரணமாக, காரில் இருந்த வெடிமருந்துகள் அதிபயங்கர சத்தத்துடன் வெடித்ததில், மசூதி பலத்த சேதம் அடைந்துள்ளது. மேலும், அதன் நுழைவு வாயிலில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலில், இதுவரை 16 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் அப்பகுதியை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும், பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு, கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று பாகிஸ்தானின் பெஷாவர் ஷியா மசூதியிலும், வெள்ளிக் கிழமை சிறப்பு தொழுகையின்போது நடந்த பயங்கரவாத தாக்குதலில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதே பெஷாவர் மசூதியிலும், செப்டம்பர் மாதம் மஸ்துங் மசூதியிலும் பெரும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரண்டு தாக்குதல்களிலும் சேர்த்து மொத்தமாக 119 பேர் வரை உயிரிழந்திருந்தனர். கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் நடந்திருப்பது, அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bootstrap