அமெரிக்கா–ஈரான் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை தொடர்பாக The Washington Post வெளியிட்ட செய்தி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பென்டகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த செய்தி கூறிய நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சத் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Washington Post வெளியிட்ட தகவலின்படி, ஈரான் போரின் தொடக்கம் முதல் குறைந்தது 22 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பென்டகனின் பொதுவெளி casualty database-ல் 18 உயிரிழப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தி குறிப்பிட்டது. மேலும், ஒரு அதிகாரி உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக இருக்கலாம் என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த கூடுதல் உயிரிழப்புகள் அனைத்தும் நேரடியாக ஈரானுடனான போரில் ஏற்பட்டவை என்று கூற முடியாது என்று அந்த அதிகாரி தெரிவித்ததாக Washington Post செய்தி கூறுகிறது. மத்திய கிழக்கில் போர் நடவடிக்கைகள் நீடித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கு பணியாற்றிய அமெரிக்க வீரர்களின் சில மரணங்களும் இதில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்திக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சத், X-ல் கடுமையாக பதிலளித்துள்ளார்.
அவர் Washington Post செய்தியை அருவருக்கத்தக்க பொய் செய்தி என்று விமர்சித்துள்ளார். மேலும், அந்த செய்தி நிறுவனத்தை ஈரான் அரசு ஊடகங்களுடன் ஒப்பிட்டு ஈரான் ஊடகங்களை விட மோசமாக செய்ல்படுகிறது Washington Post என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே, உயிரிழப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டதாக கூறப்படும் வேறுபாடு குறித்து Washington Post கேட்ட கேள்விகளுக்கு பென்டகன் பதிலளிக்கவில்லை என அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பான சர்ச்சையுடன், ஈரான் போருக்காக அமெரிக்கா செலவிடும் தொகையும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
அமெரிக்க Central Command-ன் புதிய மதிப்பீட்டின்படி, செப்டம்பர் 3 நிலவரப்படி போருக்கான செலவு சுமார் 43.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 1 வரை செலவு 38 பில்லியன் டாலராக இருந்ததாக Congressional Budget Office தெரிவித்திருந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் செலவு மேலும் அதிகரித்துள்ளது.
இதில் ஆயுதங்களுக்கான செலவு மட்டும் 28.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. குறிப்பாக Patriot மற்றும் THAAD போன்ற ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளுக்கான interceptor-கள் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆயுதங்களின் பயன்பாடு செலவு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் சேதமடைந்ததாக அமெரிக்க ஆய்வாளர் அலுவலக அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு உயிரிழப்பு, ஆயுதச் செலவு, ராணுவத் தளங்களுக்கான சேதம் என ஈரான் போரின் தாக்கம் அமெரிக்காவுக்குள் தொடர்ந்து விவாதமாகி வருகிறது.