"தமிழகத்தில் தற்போது நடைபெறும் த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே நடக்கிறது" எனத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில், "75 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சி கம்பீரமாக நிலைத்திருப்பது சாதாரணமான விஷயமல்ல. அந்தப் பெருமையுடன் திமுக இன்றைக்கும் வீறுநடை போட்டு வருகிறது. திமுக சந்திக்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நமது எதிரி யார் என்பதைச் சரியாகக் கணித்துச் செயல்பட்டிருந்தால் நமக்குத் தோல்வி ஏற்பட்டிருக்காது. நமக்கும் அவர்களுக்கும் இடையே இருந்த வாக்கு வித்தியாசம் வெறும் 17 லட்சம் மட்டும்தான்.
நமது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால்தான் இன்றைக்குத் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், இந்த தவெக ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது.
தமிழ்நாட்டில் த.வெ.க.வால் எந்தவொரு அரசியல் அலையும் வீசவில்லை. மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை குறித்து முதலமைச்சர் விஜய்க்கு சிறிதளவும் கவலையில்லை.
ஜோதிடர் சொல்வதைச் செய்தாலே போதும் என்ற எண்ணத்திலேயே அவர் இயங்கி வருகிறார். முதலமைச்சர் எப்போதும் 'Shooting Mode'-லேயே இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறிவிட்டு, தற்போது மக்கள் மத்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தவெகவிற்கு 'தமிழக ரீல்ஸ் கழகம்' என்றுதான் பெயரிட்டிருக்க வேண்டும். அவர்கள் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால், தவெக ஆட்சியில் ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு; இந்த இரண்டிற்கும் இடையேதான் போட்டியே நடக்கிறது" எனத் தெரிவித்தார்.