வர்த்தகர்கள் விடாப்பிடியாக செயலாளர் வெளியே வரவில்லை எனில் தாம் நகரசபை வாயிலை விட்டு எழுந்திருக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி பருதித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.
பருத்தித்துறை நவீன சந்தையிலிருந்து பருத்தித்துறை நகரசபை வரை சென்று அங்கு தவிசாளர் மற்றும் செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் சில மணிநேரம் மூடப்பட்டே குறித்த பேரணி இடம்பெற்றது.
நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த மரக்கறிச் சந்தையை, மீன் சந்தை வீதியில் புதிதாக கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அங்கு வியாபாரிகளை பருத்தித்துறை நகரசபை செயலாளர் தலைமையில் மாற்றம் செய்து வைக்கப்பட்டது.
ஆனாலும் புதிய சந்தைக் கட்டடம் போதிய இடவசதிகளோ அல்லது போக்குவரத்து வசதிகள் குறைந்தவையாகவும், மழை நேரங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும், நகரில் இருந்து மரக்கறிச் சந்தை தூரம் என்பதால் பொதுமக்கள் சந்தையை நாடுவது குறைவாகவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
இந்நிலையில் சுமார் 200 வரையானோர் கலந்துகொண்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட மரக்கறி சந்தையை மீண்டும், நவீன சந்தை தொகுதிக்கு மாற்றித்தருமாறு கோசமெழுப்பினர்.
இதேவேளை குறித்த சந்தையை பழைய இடத்திற்கு மாற்றித்தருமாறு மகஜரை வழங்குவதற்கு செயலாளரையும், தவிசாளரையும் நகரசபைக்கு வெளியே வருமாறு வர்த்தகர்களால் கோரப்பட்ட நிலையில் சுமார் நாற்பது நிமிடம் வரை செயலாளர் வெளியேவந்து மகஜரை தவிசாளருடன் இணைந்து பெற்றுக்கொள்ள மறுத்திருந்தார்.
வர்த்தகர்கள் விடாப்பிடியாக செயலாளர் வெளியே வரவில்லை எனில் தாம் நகரசபை வாயிலை விட்டு எழுந்திருக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க நகர சபை செயலாளர் வெளியே வந்து மகஜரை தவிசாளருடன் இணைந்து பெற்றுக்கொள்ள வருமாறு கோரிய நிலையில் இணங்கிய செயலாளர் தவிசாளருடன் இணைந்து மகஜரை பெற்றுக்கொண்டார்.
மகஜரை பெற்றுக்கொண்ட பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வர்த்தகர்களின் கோரிக்கையை மதித்து தாம் விரைவில் சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுவதற்குரிய ஆய்வுக்குழு அறிக்கை கிதைக்கப்பெற்றதும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் நிறைவுபெற்றது.