மாணவர்களுக்கான சீருடையை அன்பளிப்பு செய்த சீனா

இலங்கையின் அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.

இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் பரிமாற்றம் நேற்று (15) பத்தரமுல்லை, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டிற்காக இலங்கையில் உள்ள சுமார் 4.18 மில்லியன் பாடசாலை மாணவர்களின் முழுமையான சீருடைத் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.

இதற்காக 10.820 மில்லியன் மீட்டர் அளவிலான பாரிய சீருடை துணியை சீன அரசாங்கம் இலங்கைக்கு முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இதன்போது தொடர்புடைய இணக்கப்பாட்டுச் சான்றிதழ்கள் பரிமாற்றமானது இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷென்ஹொங் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் உட்பட கல்வி அமைச்சின் பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

Bootstrap