இலங்கையின் முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாலபே, தலஹேனமாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அவர் உடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இது உயிர்மாய்ப்பு என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
63 வயதான சி.டி. விக்ரமரத்ன, இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரது குடும்ப உறுப்பினர்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவருக்குச் சொந்தமான கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியே உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன, கொழும்பு கிழக்கு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.