இந்தியாவின் முதல் தனியார் வணிக ரீதியிலான ஆர்பிட்டல் ராக்கெட்டான 'விக்ரம்-1', ஜூலை 18இ 2026 அன்று நண்பகல் 12:05 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கெட்டை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துள்ளது.
இந்த ஏவுதல் திட்டத்திற்கு 'மிஷன் ஆகமன்' (Mission Aagaman) என்று பெயரிடப்பட்டிருந்தது. இதன் மூலம், அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு சொந்தமாக தனியார் நிறுவனம் மூலம் தங்களது ராக்கெட்டை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்த ராக்கெட் ஏவுதல் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஸ்கைரூட் குழுவினர் 'இது விண்வெளித்துறையின் புதிய விடியல் என்று தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ராக்கெட்டில் விண்வெளி குப்பைகளை அகற்றும் ரோபோடிக் கை மற்றும் புவி கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அறிவியல் கருவிகள் அனுப்பப்பட்டன. அவற்றுடன் இந்தியாவின் விண்வெளி நாயகர்களான சி.வி.ராமன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் விக்ரம் சாராபாய் ஆகியோரின் அரிசி அளவை விட சிறிய மைக்ரோ சிற்பங்கள் அடங்கிய தங்க ராக்கெட் மற்றும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைர தாமரை (Cosmic Bloom) போன்ற அடையாளப் பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்கைரூட் நிறுவன விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைத்தள பக்கத்திலும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.