கடற்பரப்புகள் கொந்தளிப்பு - விசேட எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில்,ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

அறிவிப்பின்படி, குறித்த கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதனால் அந்தக் கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த அறிவிப்புகளையும் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று தொடர்பான தனியான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழ நிலவும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Bootstrap