ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தீப்பரவலை கட்டுப்படுத்த கோட்டை மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன.
தீயணைப்பு நடவடிக்கைகளின் பின்னர், குறித்த தொழிற்சாலையிலிருந்து ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்படும் போது 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சாலையின் உள்ளே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இது குறித்து ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.