யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் குட்டிமணி மற்றும் தங்கதுரையின் உருவச்சிலைகள் திறக்கப்படவிருந்த நிகழ்வுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (Telo) முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி வல்வெட்டித்துறை சந்திக்கு அருகில் இந்தச் சிலைகளைத் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். இவ்விழா ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ் என்பவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கினை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (Telo) புலம்பெயர் அமைப்பினரின் நிதியுதவியுடன், வல்வை நகரசபையின் முன்னாள் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் முயற்சியில் இச்சிலைகள் அமைக்கப்பட்டன.
1983 கொடூரக் கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் ஜூலை 25 மற்றும் 28ஆம் திகதிகளில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.திறப்பிற்கு தடை