கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக மனிதர்களைக் கடத்திய சர்வதேசக் கும்பலைச் சேர்ந்த மூன்று மெக்சிக்கோ பிரஜைகள், அமெரிக்க நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட தகவல்களின்படி, இந்த மூன்று நபர்களும் கனடா எல்லை வழியாக நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்தவர்களை அமெரிக்காவிற்குள் கடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மெக்சிக்கோ, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களை முதலில் கனடாவிற்கு வரவழைத்து, பின்னர் அங்கிருந்து நியூயார்க் எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் கடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க, பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தும், அவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும் தலா பல ஆயிரம் டாலர்களை இந்தக் கும்பல் கட்டணமாகப் பெற்றுள்ளது.
இது தொடர்பான முழுமையான விசாரணைகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான இறுதித் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.
இவர்களுக்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இவர்களுடன் தொடர்புடைய மற்றொரு கூட்டாளி கடந்த மே மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு செப்டம்பர் மாதம் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.