ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் முழுப் பிராந்தியத்துக்கும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் இதில் சிக்கிக்கொள்ளும் என்று ஈரானின் முதன்மை அமைதிப் பேச்சாளரும் நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹம்மட் பாகர் காலிபஃப் எச்சரித்துள்ளார்.
எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நாங்கள் எண்ணெய் விற்காத பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது. எங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், எந்தக் கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது, மேலும் நீரிணையின் பாதுகாப்பு என்பது அமெரிக்கப் படைகள் இல்லாத நிலையிலேயே சாத்தியமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை 'போருக்கு முந்தைய நிலைமைக்குத் திரும்பாது' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இத்தகைய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீரிணை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரானின் மிகப்பெரிய செல்வாக்காகவும் மற்றும் தற்காப்புக் கருவியாகவும் மாறியுள்ளதாக மொஹம்மட் பாகர் காலிபஃப் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்குவதற்கு முன்பு, உலகின் மொத்த எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதமானது இந்த நீரிணை வழியே அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.