ஜப்பானில் தொடர்ந்து வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அரைகாற்சட்டை அணிந்து வர சில நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உடைக்கட்டுப்பாட்டு தளர்வு தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் ஊழியர்களின் பணிச்சூழலை எளிதாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இதற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த முடிவுக்குச் சிலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பல பெண்கள் இது ஒருதலைப்பட்சமானது என விமர்சித்து வருகின்றனர்.
அலுவலகங்களில் பெண்களுக்கு ஏற்கனவே பலவிதமான உடைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், ஆண்களுக்கு மட்டும் இத்தகைய தளர்வுகள் வழங்கப்படுவது பாரபட்சமானது என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, அலுவலகத்திற்கு அரைகாற்சட்டை அணிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தங்களின் தோற்றப் பொலிவைக் கருத்தில் கொண்டு ஆண்கள் பலர் தங்களது கால்களில் உள்ள முடிகளை நீக்குவதற்காக லேசர் அறுவை சிகிச்சைகளை நாடும் போக்கு அங்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.