இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இல்ஸா (ILSA - Instrument for Lunar Seismic Activity) என்ற அதிர்வு அறியும் அதிநவீனக் கருவி, நிலவின் தென் துருவத்தில் 250-க்கும் மேற்பட்ட நில அதிர்வு சிக்னல்களைப் பதிவு செய்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட 250+ அதிர்வுகளில், சுமார் 200 அதிர்வுகள் நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் நகர்ந்தபோது ஏற்பட்ட அதிர்வுகள் மற்றும் பிற அறிவியல் கருவிகளின் செயல்பாடுகளோடு தொடர்புடையவை ஆகும்.
மீதமுள்ள 50 அதிர்வுகள் எந்தவொரு ரோவர் அல்லது மனித செயல்பாடுகளுடனும் தொடர்பில்லாதவை ((Uncorrelated Events). இவை விண்வெளி விஞ்ஞானிகளால் உண்மையான நில அதிர்வுகளாக (Moonquakes) இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
'பிரக்யான் ரோவர்' தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளுக்கான தகவல்களை அனுப்பியது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 10 செ.மீ., ஆழம் வரை வெப்ப கவசமாக செயல்படுவதும், அந்த மண்பகுதி, ஆழத்திற்கு வெப்பத்தை கடத்தாததையும் அறிவித்தது.
மண் அமைப்பில், மெக்னீசியம் தாதுக்கள் அதிகளவில் உள்ளதை உறுதி செய்தது. இதனால், நிலவு உருவான காலகட்டத்தில், மெக்னீசியம் ஒரு திரவ பிளாஸ்மாவாக செயல்பட்டிருக்கலாம் என்பதை அறிய முடிந்தது. மிக முக்கியமாக, சிவ சக்தி பகுதியில்,250க்கும் மேற்பட்ட , நில அதிர்வுகள் ஏற்பட்டதையும் பதிவு செய்துள்ளது.